ஓடுகள், கிரானைட்கள், மரப் பொருட்கள், பிளாஸ்டிக், முகக்கவசங்கள், சைக்கிள்கள், சவர்க்காரம், வெங்காயம் போன்ற சிறிய பொருட்களும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளின் கீழ் உள்ளடங்குவதாக ராஜாங்க அமைச்சர் சேமசிங்க நேற்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட பிரதமரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேற்கூறிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக அரசாங்கம் 2018 ஆம் ஆண்டில் 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், 2019 ஆம் ஆண்டில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் செலவிட்டுள்ளதாக தெரிவித்த எம்.பி சேமசிங்க, தற்காலிக கட்டுப்பாடுகளை விதித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை சேமிக்க முடிந்துள்ளதாக தெரிவித்தார்.
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக உள்ளுர் சந்தையில் வாகனப் பற்றாக்குறையை குறைப்பதற்காக உள்ளுர் வாகனங்களை இணைக்கும் தொழிற்சாலைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக பதினொரு முதலீட்டாளர்கள் ஏற்கனவே அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்காலிக இறக்குமதி தடையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள பல பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு கைத்தொழில் அமைச்சு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)