நியூசிலாந்தில் ஒக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை காத்தான்குடியைச் சேர்ந்த 31 வயதுடைய முகமது சம்சூதீன் ஆதில் என அரச புனலாய்வு துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை சேர்ந்தவர் எனவும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர் என அந்த நாட்டு பிரதமர் முன்னதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டுக்கு பின்னரே தனது மகன் சம்சூதின் ஆதிலிடம் பல்வேறு மாற்றங்கள் காணப்பட்டதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு அவர் கல்வி பயின்ற நியூசிலாந்து பல்கலைக்கழக்தில் விபத்தொன்று ஏற்பட்டதாகவும், இதன்போது ஆதிலை அவரது நண்பர்களே காப்பாற்றி இருந்ததாகவும் தெரிவித்த தாயார், இதனைத் தொடர்ந்தே ஆதிலுக்கு சிரியா மற்றும் ஈராக் நாட்டு நண்பர்கள் கிடைத்ததாகவும் குறிப்பிட்டார்.
நண்பர்களின் ஊடாகவே அவன் தீவிரவாதிகளுடன் தொடர்பை பேணியிருக்க வேண்டுமெனவும், தனது மகனுக்கு மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளதாகவும் ஆதிலின் தாயார் தெரிவித்துள்ளார்.
-தமிழன்