மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் இருந்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கல்முனையில் இன்று (02) நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் காங்கிரஸின் கல்முனை தொகுதி அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான கே.எம் அப்துல் ரஸாக் (ஜவாத்) ஏற்பாட்டில் கல்முனை மாநகர முன்றலில் இடம்பெறவிருந்த குறித்த போராட்டத்தில் பல பாகங்களிலும் இருந்து மக்கள் பங்கேற்ற போதிலும் தடை உத்தரவினால் அங்கிருந்து மாவடிப்பள்ளி பகுதிக்கு திடிரென போராட்டம் மாற்றப்பட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது அங்கு,
"ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்! அநீதியான முறையில் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்திருக்காதே! நள்ளிரவில் கைது செய்ததன் பின்னணி என்ன? யாரை திருப்திப்படுத்த இந்தக் கைது?" போன்ற சுலோக அட்டைகளையும், நீளமான பதாதைகளையும் தாங்கியவாறு சமூக இடைவேளிகளை பேணி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
எனினும் தடை உத்தரவை மீறி பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முனைந்தோரை இராணுவத்தினர் கலைத்தனர். இன்னும் சிலர் கட்டாய அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.