இலங்கையில் முதற்கட்டமாக அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டுள்ளவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியை விரைவில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
அதேவேளை கொரோனா தடுப்பூசி தொடர்பான விசேட நிபுணர்கள் குழுவினால் அனுமதி வழங்கப்படாத சீன தடுப்பூசிகளை நாட்டுக்கு மக்களுக்கு வழங்க அனுமதிக்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
உலக நாடுகள் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தினை துரிதப்படுத்தியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையில் முதற்கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ஆரம்பத்திலேயே இது தொடர்பான முறையான திட்டமிடல் இன்மையே இதற்கான காரணமாகும்.
ஆனால் ஆரம்பத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அனுமதி வழங்கப்படாமல் தடுப்பூசியைப் பெற முடியாது என்று கூறிய அரசாங்கம் , தற்போது உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகரிக்காத சீன தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதனை விமான நிலையத்திற்கு சென்று பெற்றுக் கொண்டுள்ளார்.
கொவிட் தடுப்பூசி தொடர்பான விசேட நிபுணர்கள் அடங்கிய குழு அனுமதியளிக்காத போதிலும், இலவசமாக கிடைக்கப் பெறுகிறது என்பதற்காக அரசாங்கம் சீன தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளது. இலவசமாக வழங்கினால் எதையும் பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலைமையில் தற்போது அரசாங்கம் உள்ளது.
இவ்வாறான நிலையில் முதற்கட்டமாக தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான காலம் அண்மித்துள்ளது. எனவே கூடிய விரைவில் இலங்கைக்கு அடுத்தகட்ட தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
இதுவரையில் 9 இலட்சம் பேருக்கு முதற்கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் இரண்டாம் கட்டமாக வழங்குவதற்கு தற்போது சுமார் 2 இலட்சம் தடுப்பூசிகள் மாத்திரமே அரசாங்கத்திடம் கையிருப்பில் உள்ளன. ஆனால் ஒரு வாரத்தில் 2 இலட்சம் தடுப்பூசிகளை வழங்கி நிறைவு செய்ய முடியும்.
அவ்வாறெனில் ஒரு வாரத்தில் இந்தியாவிடமிருந்து இரண்டாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியுமா? எனினும் அஸ்ட்ரசெனிகா தயாரிப்பு நிறுவனம் அவ்வாறு வழங்க முடியும் என்று அறிவிக்கவில்லை.
இது முதற்கட்ட தடுப்பூசியை பெற்றுக் கொண்ட மக்களுக்கும் அதன் பயன் இல்லாமல் போகக் கூடிய துரதிஷ்டவசமான செயற்பாடாகும். சீனா தடுப்பூசிகளை வழங்க முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். எனினும் உரிய தரப்பினரின் அனுமதியின்றி அதனை நாட்டு மக்களுக்கு வழங்க அனுமதிக்க முடியாது என்றார்.