பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் கட்டுமான பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (18) இந்த முனையத்தின் கட்டுமான பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
ஜப்பான் நிதியுதவியுடன் முனையத்தின் கட்டுமான பணிகள் ஆரம்பத்தில் 2014 இல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது ஆரம்பிக்கப்பட்டது.
$ads={2}
எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் கீழ் அடுத்து வந்த நான்கு ஆண்டுகளில் இந்த திட்டத்தின் பணிகள் ஸ்தம்பித்துவிட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து கடந்த ஆண்டு நவம்பரில் ஜனாதிபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்ட பின்னர் முனையத்தின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்திருந்தார்.
அதன்படி, கட்டுமான பணிகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு முழு திட்டமும் மூன்று ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதிய முனையத்தில் உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ-380 உடன் இணைப்பதற்கான பயணிகளுக்கான பாலம் உட்பட பல நவீன வசதிகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.