கம்பஹாவுக்கு அடுத்தப்படியாக கொரோனா தொற்று ஏற்படக்கூடிய அதிஆபத்து பிரதேசமாக கொழும்பு அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் என்ற அளவில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி ஷேனல் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
தற்போது நாளொன்றுக்கு 6 ஆயிரம் பீ.சீ.ஆர் பரிசோதனைகளே மேற்கொள்ளப்படுகின்றன. இது போதுமானதல்ல.
நாளொன்றுக்கு 10 ஆயிரம் வரை பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும் என்று அவர் கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரிசோதனை முறை மேம்படுத்தப்படவேண்டும். சரியான பரிசோதனை கொள்கை அறிவிக்கப்படவேண்டும்.
அத்துடன் கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்ட உடனேயே சுகாதார அதிகாரிகள் தகவல்களை வெளியிடவேண்டும் என்றும் வைத்திய கலாநிதி ஷேனல் பெர்ணான்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.
மனித வலு, பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை மற்றும் தொழில்நுட்பம் என்பவற்றை அரசாங்கம் கருத்திற்கொண்டு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் அதிகரிக்கப்படவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.