பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் இம்மாதம் 20 ஆம் திகதியின் பின்னர் நிச்சயமாக வெளியில் வந்து விடுவார் என சிரேஷ்ட சட்டத்தரணியும் அக்கட்சியின் பிரதித் தலைவருமான என்.எம்.ஷஹீட் தெரிவித்தார்.
இன்று (18) மாலை கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பின் போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி என்.எம்.ஷஹீட், "சட்டமா அதிபர் பிழையான வழிமுறையில் மேற்கொண்ட ஒரு தீர்ப்பே இவ்வகையான ஒரு பிரச்சினை உருவாகுவதற்கான பிரதான காரணமாகும்.
சட்டமா அதிபர் இவ்வாறான ஒரு பிழையான தீர்ப்பை மேற்கொண்டது இது முதல் தடவையல்ல; இதற்கு முன்னர் ரவி கருணாநாயக்க மற்றும் குருநாகல் மாநகர மேயர் ஒருவரின் விடயத்திலும் இவ்வாறான பிழையான தீர்ப்புகளை மேற்கொண்டிருந்தார்.
அவ்விரு சந்தர்ப்பங்களிலும் சரியான நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு சட்டம் சுட்டிக்காட்டும் வகையில் தீர்ப்புகளை வழங்கி நீதிமன்றம் வழி காட்டியது. அவற்றிலிருந்து கூட இச்சட்டமா அதிபர் ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.
$ads={2}
மேலும், ரிஷாட் பதியுதீன் அண்மையில் தலைமறைவாகும் வரையில் கூட குற்றத்தடுப்பு பிரிவினர் எப்போதெல்லாம் விசாரணைகளுக்காக அழைத்தார்களோ அப்போதெல்லாம் விசாரணைகளுக்காகச் சென்று வந்தவர்.
ஒரு போதும் தலைமறைவாகி இருந்தவரல்ல. ஆனால், இம்முறை சட்டமா அதிபரின் பிழையான அணுகுமுறைகளே அவரைத் தலைமறைவுக்கு உட்படுத்தி இருக்கிறது. ரிஷாட் அவர்கள் சட்டமா அதிபரின் குறித்த தீர்ப்பிற்கெதிராய் விண்ணப்பித்துள்ள முறையீடானது வருகிற 20ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.
அதன் போது ரிஷாட் பதியுதீன் அவர்கள் நீதிமன்றில் தோன்றுவார்.
தற்போது அவருக்குக் கிடைக்கப் பெற்றிருக்கும் சட்ட ஆலோசனைகளுக்கு அமைவாகவே அவர் தலைமறைவை மேற்கொள்கிறார்." என்றும் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். ஷஹீட் அவர்கள் தெரிவித்தார்.