முன்னாள் பிரதியமைச்சர் கருணா என அலைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஆதரவு தெரிவித்து கல்முனை பகுதியில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகள் இனந்தெரியாதவர்களால் எரியூட்டி சேதப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று (10) நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தில் கப்பல் சின்னத்தில் போட்டியிடும் கருணா அம்மானிற்கு 35 அடி நீளமான பதாதைகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ள நிலையில் “எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்” என்ற வாசகத்துடன் கப்பல் சின்னத்துடன் கல்முனை நகர பகுதியிலுள்ள மக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டிருந்தன.
இத்துண்டுப்பிரசுரங்களை பாண்டிருப்பு சந்தை, தாளவட்டுவான் சந்தி, நீலாவணை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ஆகிய பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு மக்கள் மத்தியில் விழிப்பூட்டல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் எரியூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.