இலங்கையில் இறுதி போரின் போது கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் புத்தளம் நகரில் நேற்று (18) விளக்குகள் ஏற்றி வைத்த இருவரை புத்தளம் தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் 30 மற்றும் 35 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் புத்தளம் திலியாடியா பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்தில் உள்ள மீன் சந்தைக்கு முன்னால் மன்னார் சாலையில் நடைபாதையில் இரும்பு வேலியில் இருவருமே விளக்குகள் ஏற்றி வைத்திருந்தனர்.
உளவுத்துறையிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து, புத்தளம் பொலிஸ் தலைமையகத்தின் அதிகாரிகள் விளக்குகளை ஏற்றிக்கொண்டிருந்த இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையின் போது, போரில் கொல்லப்பட்ட அனைவரையும் நினைவுகூரும் நோக்கத்துடன் விளக்குகள் ஏற்றப்பட்டதாகவும், வேறு எந்த நோக்கமும் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரின் அறிக்கைகளையும் பதிவு செய்த பின்னர் விடுவிக்கப்பட்டதாக புத்தளம் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.