கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் 489 கடற்படை வீரர்களும், கடற்படை வீரர்களின் உறவினர்கள் 37 பேரும் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று 90 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பேணியமையாலேயே தொற்றுப்பரவல் நிலைமையை கட்டுப்படுத்த முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
'தற்போது பதிவாகும் பெரும்பாளான கொரோனா தொற்றாளர்கள் கடற்படை மற்றும் அவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள். வெளிநாடுகளில் இருந்த வருகை தரும் சிலரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலையில், நாம் அசமந்தமாக செயற்படக்கூடாது. ஆகவே சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட அனைத்து சுகாதார வழிமுறைகளையும் அரச மற்றும் தனியார் துறையில் தொழிலில் ஈடுபடுவோர் பின்பற்ற வேண்டும்.' என தெரிவித்தார்.